Friday, February 25, 2005

சிறுவர் புத்தகங்கள் - ஆர். பொன்னம்மாள் (8)

நன்னெறிக் கதைகள்: நன்னெறிச் செய்யுள் முப்பதுக்கும் அர்த்தம் எழுதி முப்பது கதைகள் சொல்லப் பட்டிருக்கின்றன. முப்பதிலும் நகைச்சுவை, வீரம், படிப்பினை எல்லாமே நிறைந்திருக்கும்.

கருணை வள்ளல்: ரத்னபாலாவில் வெளி வந்த பழங்கால புலவர் வரலாறுகளும் கலந்து தந்த சிறுகதைத் தொகுப்பு. பரிமாறும் போது புலவரை அவமதிக்க முதுகில் ஏறிக் கொண்ட புலவரை உப்புமூட்டை தூக்கிய சகிப்புத் தனமையும், தந்தை இல்லாத போது வந்த புலவரை வெறுங்கையோடு அனுப்ப மனமில்லாமல்தான் விளையாடியத் தங்கத் தேரை சிற்றரசன் மகன் நீட்டுவதும் மறக்க முடியாத வரலாறு.

பொன்னான காலம்: திரு. சோமு அவர்கள் பள்ளி விடுமுறையில் மாணவர்கள் நடிக்க ஓரங்க நாடகங்கள் வேண்டும் என்று கேட்டு வாங்கிய நாடக நூல். மொத்தம் எட்டு நாடகங்கள். பெற்றவர்களின் கஷ்டங்களைப் புரிந்துகொள்ளும் விதத்தை நயமாகச் சொல்கிற நாடகம் 'பூக்கள் பலவிதம்'. துன்பம் பிறரைத் துன்புறுத்தும் அளவு போகக்கூடாது என்பதை 'மன அழுக்கு' நாடகம் மூலம் உணர்கிறோம்.